Tuesday 23 July 2013

வாய்ப் புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்:-

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?
பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.

ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுகின்றது

காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.

பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.

உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.

மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

Monday 22 July 2013

சில நேரங்களில் சில தீர்ப்புகள்!....

ஏங்க... நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே... கையிலே வெண்ணையை வச்சுகிட்டு, வீணா அலைவானேன்? பாங்க்ல கிடக்கிற பணத்தை எடுத்து வந்து, சிவசு கிட்டே குடுங்க. அவன் அலையறதை காண சகிக்கலைங்க,'' என்ற சரயுவை முறைத்தார் பாலசுப்ரமணியம்.
  ""என்னடி பேசுற... அதத்தூக்கி குடுத்துட்டு, நாம தெருவுலே நிக்கணுமா?'' ""நாம ஏங்க தெருவுக்கு போறோம்... நாம பெத்த புள்ளங்க; நம்மள காப்பாத்துவான். புள்ளை, படாத பாடு படறான்... நாயா பேயா அலையறான். புள்ளைக்கு உதவாத பணம் நமக்கெதுக்கு,'' என்று சீறினாள் சரயு

. ""வேணாம் சரயு... பணத்தை குடுத்து, மனஸ்தாபத்தை வாங்காதே...'' விவாதங்கள் முற்றி, சரயு கண்ணீராலும், கோபதாப பேச்சாலும், அவரைக் கரைத்து, ஆறு லட்சத்தை வள்ளிசாக தூக்கி, சிவசுவின் கையில் வைத்தாள்.
  மகனும், மருமகளும் கண்ணீர் மல்க காலில் விழுந்தனர். "அம்மா... அம்மா...' என்று சிவசுவும். "அத்தை... அத்தை...' என்று விஜியும், தாங்கிப் பிடிக்க, உச்சி குளிர்ந்து போனாள் சரயு.

 வீடு வாங்கி முடித்ததுமேயே, ""அம்மா... நீங்க வாசல்புற அறையிலேயே தங்கிக்கலாம். அது, இனிமே உங்க ரெண்டு பேருக்குத் தான்!'' என்று சிவசு சொன்னபோது, பெருமிதமாக ஏறிட்டாள் சரயு. ஆனால், அது பெயருக்குத் தான் அப்பா, அம்மா அறையாக இருந்ததே தவிர, அது விஜியின் உறவினர்கள் தங்கும் விருந்தினர் அறையாக இருந்ததுதான் அதிகம். 

இருவரும், ஹாலில் தரையில் படுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அடிக்கடி தள்ளப்பட்டனர். ஹாலிலும் நிம்மதியாய் அக்கடா என்று, காலை நீட்டிப் படுக்க முடியாமல், வருவோரும், போவோருமாய், தூக்கம் பறிபோக, உடம்பே அலண்டு போனது. வருடங்கள் போனதே தவிர, சிவசுவும், விஜியும், பணம் வாங்கிய விஷயத்தை, சுலபமாய் மறந்தே போயினர்.

 மருந்து வாங்கவோ, அவசிய செலவுக்கோ கூட, இருவரிடமும் கையேந்தும் நிலையில், பாலசுப்ரமணியத்துக்கு, சங்கோஜம் பிடுங்கி தின்றது. சிவசுவுக்கு பணம் தந்த விஷயம் எப்படியோ கசிந்து, இளைய மகன் குமாரின் காதை அடைய, அவனும், அவன் மனைவியும், நேராகவே வந்து, ""அந்த பணத்துக்கு, நானும் உரிமைக்காரன் தானே... நானும் உங்களுக்கு தானே பிறந்தேன்?'' என்று குதித்தான். அவன் மனைவியோ, ""பணத்தோடு வந்தால், என் வாசல் கதவு திறக்கும்,'' என்று பச்சையாகவே சொல்லிவிட்டு, ஓரகத்தியைப் பார்த்து பொருமி தீர்த்துவிட்டுக் கிளம்பினாள்.

கணவருக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமாக, சரயு வாயைத் திறந்து பணம் பற்றி பேச்செடுக்க, ஆங்காரமாகி விட்டாள் விஜி. ""மகனுக்கு கொடுத்ததை திருப்பி கேக்கறீங்களே... நீங்க பெத்தவங்க தானா?'' என்றாள். ""பெத்தவங்கன்னாலும் வயித்துல பசியும், உடம்புக்கு நோவும் வராம இருக்காதா என்ன... இதோ குமார், "முகத்துலேயே முழிக்காதே... பணமில்லாம'ன்னு பேசிட்டான். குறைந்தது பாதி பணமாவது தந்தா தானே.... குமாருக்கும் குடுக்கணும் தானே?'' என்றாள் சரயு.  

""அப்போ... இங்கே இத்தனை வருடம் போர்டிங்கு, லாட்ஜிங்குன்னு இருந்தது, அப்பப்போ டாக்டருக்குன்னு எளவெடுத்தது, இதெல்லாம் எந்த கணக்கு பணமாம்... பணம் பொல்லாத பணம். பிசாத்து ஆறு லட்சத்துக்கு, கெழங்களுக்கு வாயப் பாரு... போட்டதை தின்னுட்டு, மூலையில கிடக்கிறதா இருந்தா, இங்க இருங்க... இல்லே, வீட்டைவிட்டு வெளியே போயிடுங்க. ""ஏதாவது பணம், கிணம்ன்னு வாயைத் தொறந்தா, நான் பொல்லாதவளாயிடுவேன்... ஆமா, பணம் தந்தேன் தந்தேன்னு சொல்றீங்களே... நான் பணமே வாங்கலைங்கறேன்... நீங்க என்ன கோர்ட்டுக்கு போவீங்களா... தோபாருங்க... சல்லிக்காசு கூட தர முடியாது. உங்களால ஆனதை பாருங்க!'' என்று, ரசாபாசமாய் கத்திய விஜியின் முன், வாயடைத்துப் போனாள் சரயு.

 பேச்சுகளின் வீச்சின் முன், அந்த தாயுள்ளம் மிரண்டு போனது. "தலைக்கு மேலேயும் வர ஆரம்பித்துவிட்ட வெள்ளச் சூழலில், எதைப் பிடித்து கொண்டு நீந்த, எப்படி நீந்த?' என்று பாலசுப்ரமணியம் திகைத்து நின்றார். இதற்கு பின், நிலைமை மிகவும் மோசமானது. 

சிவசு வாய், கண், காது எல்லாவற்றையும் மூடிக் கொள்ள, விஜி தன் சுய ரூபத்தைக் காட்டினாள். விஜியே ஒரு இரும்புத் திரையாக மாறிவிட, இருவரும், மூச்சுவிடக் கூட திணறி மரண அவஸ்தை பட்டனர். எல்லாவற்றுக்கும் முடிவாக, சிவசு ஒருநாள், ""அப்பா, எனக்கு டில்லிக்கு டிரான்ஸ்பராயிடுச்சு... அதனாலே இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன். "அட்வான்ஸ்' கூட வாங்கிட்டேன். நாளைக்கு, "பாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்'ல வந்து, சாமான்களை, "பாக்' செய்திடுவாங்க. நான் நாளைக்கே கிளம்பறேன். டிக்கட், "புக்' பண்ணியாச்சு. குமார் உங்களை அழைச்சிட்டு போவான்... பேசிட்டேன்,'' என்றான்.  

குமார் அழைச்சிட்டு போறதாவது... பாலசுப்ரமணியத்துக்கு, "சிவுக்' கென்றது. ""சிவசு... "நான் வர மாட்டேன். நீங்களும் பணமில்லாம இங்க வரவேணாம்ன்னு, குமார் போன்ல சொல்லிட் டானேப்பா,'' என்றார் உடைந்த குரலில். ""என்னப்பா பேசுறீங்க... அவனுக்கு மட்டும் உங்களை காப்பாத்தற கடமையில்லையா... சாவற மட்டும், நாந்தான் உங்களை சுமக்கணுமா?'' சிவசுவின் வார்த்தையில், அனல் அடித்தது. ""நீ, அவனுக்கு சேர வேண்டிய பணத்தைக்குடு, அவன் தங்கமா தாங்குவான்!'' என்று குறுக் கிட்டாள் சரயு.

  ""எதுக்கு பணம்... ஏது பணம்... நீங்க தந்து, நாங்க வாங்கினோமா... இல்லவே இல்லைங்கறேன்... உங்களால ஆனதை பாருங்க... கோர்ட்டுக்கு போனாலும் ஒண்ணும் பருப்பு வேகாது. ""அப்புறமும் இங்கதான் வந்து நிக்கணும். வாயப் பொளந்துட்டு, போனப்புறம் கொள்ளி போடவும், நெய்ப்பந்தம் பிடிக்கவும், எங்க தயவுதானே வேணும்!'' என்று, படப்படத்தவள், சிவசுவை இழுத்துக்கொண்டு உள்ளே போய், அறைக் கதவை அறைந்து சாத்தினாள் விஜி. ""தப்பு பண்ணிட்டோம்ங்க?'' என்று அழுத மனைவியை, வெறுமனே பார்த்தார் பாலசுப்ரமணியம்.

 "வாழவேண்டிய மீதி வாழ்க்கையை, அதன் காலம் வரை வாழ்ந்து தானே ஆக வேண்டும்... அது காலம் வகுத்து வைத்த கட்டாயம் அல்லவா... வேலைக்கு செல்ல இடம் கொடாத உடம்புடனும், பணமில்லாத வெறுங்கையுடனும்...' யோசனையில் புருவங்கள் முடிச்சிட்டன.

 நீதிபதி மாணிக்கவல்லி நிமிர்ந்து அமர்ந்தாள். எல்லாம் பேசி முடித்த பாலசுப்ரமணியம், மேல் துண்டால் கண்களை துடைத்துக் கொண்டார். ""அம்மா... இப்பவும் அந்த பணத்துலே, என் இரண்டு பிள்ளைகளுக்கும், கல்யாண மாகிப் போன என் பெண்ணுக்கும், ஒவ்வொரு லட்சம் தந்துடத்தான் விருப்பம். மீதியை, எங்க மிச்ச காலத்துக்கு வச்சிக்கிடறோம். அப்புறமா, நா.. நாங்க யாரோடையும் இருக்கவும் இஷ்டப்படலை. ரொம்பவும் பட்டாச்சு...

  ""நெய் பந்தமும், மகன் கைகொள்ளி யும் வேண் டாம்மா... மின்சார தகனமே போதும். ஏற்கனவே நெஞ்சுலே சொருகின கொள்ளி, இன்னமும் எரிஞ்சு கிட்டு தானிருக்கு... இனியாவது கடைசி காலத்தை நிம்மதியா கழிக்கணும்ன்னு ஆசையாயிருக்கும்மா... என் மருமக விஜி சொன்ன வார்த்தையால தான், கோர்ட்டுக்கு போனாத்தான் என்னன்னு தோணுச்சு... ஏறிட்டேன்,'' என்றார்.

  சிவசுவின் முகம் அஷ்டகோணலாக, விஜியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இருவருமே, பாலசுப்ரமணியம் கோர்ட்டுக்குப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை. கோர்ட்டு, குமாரையும் வரவழைத்திருந்தது. 

அவனும் குடும்பத்துடன் வந்திருந்தான். அவன் முகத்தில், ஒரு குருரத் திருப்தி நிலவியது. அலட்சியமாக பார்த்துக் கொண்டு நின்றான். சுற்றிலும் பார்வையை ஓட விட, நீதிபதி மாணிக்கவல்லி, கண்ணாடியை சரிசெய்து கொண்டு, கணீரென்ற குரலில் ஆரம்பித்தாள்...

 ""இந்த நீதிமன்றம், இதுவரை எத்தனையோ வழக்குகளை சந்தித்திருக்கிறது. முதன் முறையாக ஒரு பெற்றோர், தங்களுடைய வாழ்வாதாரத்தை, பெற்ற பிள்ளையிடமே கையேந்தி பெறுவதற்காக, இந்த மன்றத்தை நாடியுள்ளதை வருத்தத்துடன் கவனிக்கிறது...

 ""தந்தையிடமிருந்த, அவருடைய உழைப்பூதியத்தை தன் தேவைக்காக வாங்கிக்கொண்டு, திருப்பித் தர மறுத்ததுடன், பெற்றோர் என்றும் எண்ணாமல், உதாசீனப்படுத்தி, மனவேதனைக்கு ஆளாக்கியிருக்கின்றனர்.

  ""சிவசுவும், அவர் மனைவியும், சகோதரன் வர மாட்டான் என்று தெரிந்தும், சுயநலமாக சிந்தித்து, அவர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு, ஊருக்கு போக நினைத்த அந்த இருவரின் செயலை, மன்னிக்க முடியாத குற்றமாக இந்த கோர்ட் நினைக்கிறது...

""அதே போல் இளைய மகன் குமாரின் நடத்தையையும், இந்த மன்றம் வன்மையாக கண்டிக்கிறது... பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, அவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், விட்டேற்றியாக இருந்த இருவரையும் கூட, குற்றமிழைத்தவர்களாகவே இந்த மன்றம் கருதுகிறது. பெற்றவர்களின் மன உளைச்சலை, இரு பிள்ளைகளுமே அதிகப்படுத்தி இருக்கின்றனர்...  

""எனவே, சிவசு, தன் தந்தையிடம் வாங்கிய, ஆறு லட்சத்திற்கும் இன்றைய தேதி வரையில், அதற்கான வட்டித் தொகையுடன் திருப்பித் தர வேண்டுமாய், இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 90 நாட்கள் அவகாசம் தருகிறது... ""இந்த 90 நாட்களும், பெற்றோரை தன் பொறுப்பில் வைத்து பராமரிக்கும்படி, குமாருக்கு இந்த மன்றம் ஆணையிடுகிறது. அதாவது, குமார் தனி வீடு பார்த்து, குடியமர்த்தி அவர்களுக்கான எல்லா செலவுகளையும், வாடகை, சாப்பாடு, மருந்து என்று அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய கைச் செலவுக்காக மாதம், நாலாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று, இந்த கோர்ட் தீர்ப்பளிக்கிறது.  

""குடும்ப கவுரவம் என்றும், சடங்கு சம்பிரதாயம் என்றும் குழம்பாமல், வாழும் நாட்களை நிம்மதியாக வாழ, சட்டத்தின் துணையை நாடி, சரியான முடிவெடுத்த, பெரியவர் பாலசுப்ர மணியத்தை, இந்த மன்றம் பாராட்டுகிறது.

  ""இந்த வழக்கு, இனிவரும் காலங்களிலும், ஒரு பாடமாக இருக்கும் என்று, இந்த நீதிமன்றம் நினைக்கிறது!'' என்று தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி மாணிக்க வல்லி. சிவசுவும், விஜியும் தவிப்புடன் நிற்க, குமாரும் அவன் மனைவியும் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சரயுவும், பாலசுப்ரமணியமும், மகிழ்ச்சி பொங்க, கண்ணீர் மல்க கை கூப்பி நின்றனர்.

மனைவியின் உள்ளம், மங்காத செல்வம்!


வீட்டினுள் காரை பார்க் செய்துவிட்டு பரத்... ஒரு வித யோசனையும் சோர்வுமாக, உள்ளே வந்தான். சூட்கேசை, ஒரு நாற்காலியில் கிடத்தி, மற்றொரு சேரில் கால் தளர்த்தி, ரிலாக்சாக அமர்ந்தான்.
கணவனின் வருகை தெரிந்து, மின்விசிறியை முழுவீச்சில் சுற்ற விட்டாள் லஷ்மி; பரத்தின் மனைவி.
பொதுவாக, இதுபோன்று வெளியிலிருந்து வரும் பரத், பத்து நிமிடமாவது ஒய்வெடுத்த பின் தான், பேசுவான். தொடர்ந்து காபி, டிபன் வந்தவுடன் சாப்பிட ஆரம்பிப்பான். அது தெரிந்து லஷ்மியும் அமைதியாக, எதிர்புறம் அமர்ந்து வழக்கம் போல, தன் கணவனை ரசிக்க ஆரம்பித்தாள்.
அவர்களுக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது. குழந்தை பெற்றுக் கொள்வதை பரத் தள்ளி போட விரும்பிய போது, லஷ்மி மறுப்பேதும் சொல்லவில்லை. காரணம், கணவனை நம்பி, தன் வாழ்க்கையை ஒப்படைத்த பின், அந்த வாழ்க்கை வாகனத்தை, ஒருவரே ஒட்டி செல்வது தானே உத்தமம். இது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும், கணவன் மனம் கோணாது நடக்க வேண்டும் என்ற, பெற்றோரின் அறிவுரையும் ஒரு காரணம்.
இன்று மேலும், பத்து நிமிடங்கள் கழித்தே சோர்விலிருந்து கண்விழித்தான் பரத். எதிரில் லஷ்மி. இந்த காலத்தில், இப்படி ஒரு பெண்! கட்டுப்பாட்டுடன் வளர்ந்து... நாகரிகத்தின் வெளிச்சங்களை பார்க்காத பெண். பரத்திற்கு பெரிதாக லஷ்மி மீது, முன்பு ஈர்ப்பு இருந்ததில்லை. நன்றிக்கடன் என்று கூறி, அப்பாவின் வற்புறுத்தலுக்கு தலையாட்டிய தன்னை, லஷ்மி இப்படி அன்பால் கட்டிப்போடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அதே நேரம் அரசியல், விளையாட்டு, விஞ்ஞானம் என்ற விஷயங்களில் உட்புகுந்து விவாதம் செய்து, கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு, பரத்திற்கு லஷ்மி ஏற்றவள் இல்லை என்பதும் உண்மையே.
""என்னங்க ரொம்ப சிந்தனையா இருக்கீங்க?'' லஷ்மி .
சிரித்தான் பரத். தன் பிரச்னையை, இவளிடம் சொன்னால், இவளால் தீர்க்க முடியுமா... ""போய் டிபன் கொண்டா.''
இடியாப்பமும், குருமாவும் வர... எழுந்து கை கழுவி வந்து, இரண்டு வாய் சாப்பிட்டிருப்பான்...
""லஷ்மி... எனக்கு, நான் வேலை பாக்கிற கம்பெனி எவ்வளவு முக்கியம்ன்னு உனக்கு தெரியுமில்ல,'' என்று கேட்டான்.
""நல்லா தெரியும்ங்க.''
""வெளிநாட்டு கம்பெனியாக இருந்தாலும், மாசம் இரண்டு லட்சம், இந்தியாவிலேயே தர்றான்.''
""தெரியும்ங்க.''
""மொத்தம் இந்தியாவுல உள்ள எட்டு பிராஞ்ச்ல... இங்க சென்னையில் உள்ள பிராஞ்ச்க்கு, நான் தான் ஹெட்.''
""நல்லா தெரியும்ங்க.''
""இப்ப... அதவிட பெரிய சான்ஸ் வந்திருக்கு லஷ்மி இதுல நான் ஜெயிச்சா... பெரிய புராஜெக்ட் என் கைக்கு வரும். ஆனா, அது முடியாது போலிருக்கு லஷ்மி.''
சற்று விரக்தியாக சொல்ல, லஷ்மி, ""ஏங்க முடியாது... நீங்க டபுள் டிகிரி வாங்கியிருக்கீங்க, நல்லா இங்கிலிஷ் பேசறீங்க. இந்த ஆபீசை ரெண்டு வருஷமா நடத்தறீங்க... பாக்க ராஜாவாட்டம் இருக்கீங்க, நீங்க ஏன் ஜெயிக்க முடியாது!'' என்றாள்.
அவளது தலையை அன்பாக தடவிய பரத். அவளுக்கு, தன் மேல் இருக்கும் நம்பிக்கையை நினைத்து பெருமை கொண்டான்.
""நீ சொல்றது சரி தான் லஷ்மி... ஆனா, என் கம்பெனியோட ஆல் ஓவர் ஹெட், நியூயார்க்ல இருக்கு... அவங்க நாகரிகத்தின் உச்சம். அவங்க, எனக்கு ஒரு பெரிய புராஜெக்ட் கொடுத்து... இந்தியாவுக்கே தலைமையா நியமிக்கணும்ன்னா... அதுக்கு சில திறமைகளை எதிர்பார்ப்பாங்க. அதுல நீ சொல்றத விட, வேற நெறய எதிர்பார்ப்பாங்க... அது எனக்கு இல்ல லஷ்மி.''
லஷ்மி புரியாமல் பார்க்க, தொடர்ந்தான் பரத், ""ஆமாம் லஷ்மி... அவங்களுக்கு என்னோட குடும்ப நிலையும் முக்கியம். குழந்தை இல்லாதது பிளஸ் பாய்ன்ட். ஆனா, என்னோட லைப் பார்ட்னர்; அது தான் நீ... இன்னும் மாடர்னா, ஸ்மார்ட்டா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பாங்க.''
மேலும் குழப்பமானது லஷ்மிக்கு.
""ஏங்க, என்னங்க பேசறீங்க... நான் எப்படி இருந்தா உங்க கம்பெனிக்கு என்னங்க? நீங்க ஒழுங்கா வேல பார்த்தா போதாது?''
வாய்விட்டு சிரித்தான் பரத்.
""இதான்... இங்கதான் நீ கட்டுபெட்டின்னு நிரூபிக்கிற. என் வேலை தான் முக்கியம்ன்னா, அப்புறம் ஏன் இந்த ஷூ, பேன்ட், டை எல்லாம்... ம்... அதான் கம்பெனியோட டிரஸ்கோட், சில ரூல்ஸ், சில பார்மாலிட்டிஸ், இதுல எல்லாம் அவங்க ரொம்ப கவனமா இருப்பாங்க. இப்ப என்னோட, இந்த விஷயத்த எடுத்துக்க, டில்லில அடுத்த வாரம், ஒரு பெரிய பார்ட்டி இருக்கு... இதுக்கு எங்க பிரசிடென்ட் மிஸ்டர் பிரடெரிக்ன்னு ஒருத்தர் வருவாரு. அங்க இந்தியாவுல உள்ள எட்டு பிராஞ்ச்லிருந்தும், எம்.டி., எல்லாம், தம்பதிகளாத் தான் வருவாங்க; வரணும். எங்களுக்குள்ள ஒரு சின்ன போட்டி, சின்ன இன்டர்வியூ... இதுல எந்த ஜோடி ஸ்கோர் செய்றாங்களோ, அவங்களுக்கு ஒரு புது புராஜெக்ட், பிரசிடென்ட் தருவாரு. அதோட வேல்யு, ஆயிரத்து நூறு கோடி. மேலும், அத வாங்கினவங்க இங்க, "சீப்' ஆய்டுவாங்க. அதுக்கப்புறம் வளர்ச்சி ஓ... காட்... எங்கேயோ போய்டும். பட், நான் உன்னை அழைச்சுக்கிட்டு போய், அத சாதிக்க முடியும்ன்னு தோணல.''
பரத்தின் குரலில் இயலாமை தெரிந்தது. இப்போது லஷ்மிக்கு ஓரளவு புரிந்தது. ஆனாலும், குழந்தை போல் கேட்டாள்...
""ஏங்க... இன்னும் ஒரு வாரம் இருக்கே, நான் கொஞ்சம் மாற முடியாதா ?''
மறுபடியும் சிரித்தான் பரத்.
""என்ன லஷ்மி, விளையாடறியா? மொதல்ல உன் கூந்தல வெட்டிக்கணும்; முடியுமா சொல்லு.''
""என்னது... புருஷன் உயிரோட இருக்கும் போது முடி வெட்டிக்கணுமா,'' என்று பதறினாள் லஷ்மி.
""சரி விடு. லஷ்மி... வாழ்க்கையில சில விஷயங்கள, நாம இழந்து தான் ஆகணும்,'' என்று சொல்லிய பரத், விடு விடுவென்று டிபனை சாப்பிட ஆரம்பித்தான்.
வேதனையில் ஆழ்ந்தாள் லஷ்மி. எல்லா விஷயத்திலும், குறை வைக்க கூடாதென்று இருக்கும் போது, ஏன்... இந்த பிரச்னையில் தன்னால் பரத்திற்கு ஈடாக இருக்க முடியவில்லை? மாடர்ன் டிரஸ் போட்டு, உயரமான செருப்பு போட்டு, பவுடர் லிப்ஸ்டிக்கை அப்பி, வெளிநாட்டு ஆங்கில உச்சரிப்போடு, இதெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லை என்பது கண்கூடாக தெரிந்தது.
இரவு பரத் தூங்கியபின்னும், லஷ்மி தூங்கவில்லை. ஊரில் அப்பாவிடம் போன் பேசலாமா என்று கூட யோசித்தாள். அப்பாவால் பெரிதாக என்ன செய்ய முடியும் என்றும் தோன்றியது.
சில நாட்களுக்கு பிறகு, ஒரு இரவு வேளையில் லஷ்மி, பரத்திடம் வந்தாள்.
""ஏங்க உங்களுக்கு தாங்க அந்த புராஜெக்ட்... இது உறுதிங்க.''
""என்ன சொல்ற?'' புரியாமல் கேட்டான் பரத்.
""ஆனா, நான் சொல்றபடி நீங்க கேக்கணும்... கேட்டா நீங்க கண்டிப்பா நம்பர் ஒண்ணா வருவீங்க.''
புதிர் போட்டாள் லஷ்மி .
சுவாரசியமாக தன் மனைவியை பார்த்த பரத், ""சொல்லு... என்ன செய்யணும்?'' என்று கேட்டான்.
""பொதுவா பார்ட்டிக்கு, நீங்க, உங்க ஜோடியோட வரணும்ன்னு தான் எதிர்பார்ப்பாங்க... கண்டிப்பா மனைவி தான் வரணும்ன்னு சொல்ல மாட்டாங்க இல்லியா? ஒரு பார்ட்னர், அது, லவ்வராவும் இருக்கலாம். இல்லியா? அதுமாதிரி... நீங்க ஏங்க ஒரு அழகான பெண்ணை பார்ட்னர்ன்னு, கூட கூட்டிகிட்டு போகக் கூடாது? யாராவது குறிப்பா, இது உன் மனைவியான்னு கேட்டா கூட, இப்ப "லவ்' செய்றேன் கூடிய சீக்கரம் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்னு சொல்லிடுங்க. என்ன... ஒரு ரெண்டு நாளைக்கு, உங்க மனைவியா நடிக்க ஒருத்திய ஏற்பாடு செய்துகிட்டா, நீங்க நெனச்சது ஏங்க நடக்காது?''
லஷ்மி சொல்ல, பரத் அதிர்ந்தான்... லஷ்மியா இந்த யோசனை சொல்கிறாள் என்று. பெண்கள் விளையாட்டுக்கு கூட, தன் கணவனை விட்டு தரமாட்டார்களே!
""என்ன யோசிக்கறீங்கன்னு எனக்கு புரியுதுங்க, இன்னொரு பொண்ண எப்படி புருஷன் கூட, ஒரு மனைவி இணைச்சு பாப்பான்னு தானே? எனக்கு உங்க எதிர்காலம் முக்கியம்ங்க. மேலும், எம்மேல காட்டுற அன்ப யாராலும் பங்கு போட்டுக்க முடியாது. அந்த அளவுக்கு உங்கமேல நம்பிக்கை உண்டு... நீங்க நல்லா யோசிச்சு முடிவு செய்ங்க.
""உங்களுக்கு ஜோடியாக, ஒருத்திய நடிக்க சொல்லலாம்... எனக்கு எந்த வருத்தமுமில்லை. நீங்க தயங்காதீங்க. போட்டி, டில்லில நடக்க போவுது, உங்க ஆபீசுக்கு தெரிய சான்ஸ் இல்ல. கூடிய வரைக்கும் போட்டோ எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிடுங்க... நானும் உங்க கூட டில்லி வர்றேன். ஆனா பார்ட்டிக்கு, அவள கூட்டிக்கிட்டு போங்க, பயப்படாதீங்க. என் யோசனை சரியா வருமா?''
நம்பிக்கையோடு கேட்டாள் லஷ்மி.
இப்போது, அதிர்விலிருந்து ஆச்சரியமானான் பரத் . இது நடந்தால், ரிசல்ட்டும் சாத்தியம் தான். பாரின் டீமிற்கு, ஒரு பார்ட்னர் போதும். அவள்... மனைவியா என்று துருவி ஆராயமாட்டார்கள். பேருக்கு ஒருத்திய காட்டி, புராஜெக்டை பெறலாம். வாடகைக்கு அழகான பெண்கள் கிடைப்பரா?
தன் சந்தேகத்தை லஷ்மியிடம் கேட்டான்.
""நீ சொல்றபடி, உன்னோட தியாகத்துல, ஒரு ரெண்டு நாளைக்கு இன்னொருத்திய ஏற்பாடு செஞ்சுக்கலாம் லஷ்மி... ஆனா, அவ... அழகா இருந்தா மட்டும் போறாது. புத்திசாலியா, மாடர்னா இருக்கணும்... அதுமாதிரி யாரு கிடைப்பாங்க?''
உடனே லஷ்மி... அருகிலிருந்த மேஜையின் டிராயரை இழுத்தாள். அதில் இருந்த ஒரு போட்டோவ எடுத்து, தன் கணவரிடம் காட்டி, "இத பாருங்க, உங்களுக்கு புடிச்சிருக்கா?' என்றாள். லஷ்மி காட்டிய, அந்த போட்டோவில் இருந்த பெண், மாடர்ன் டிரஸ்சில் மிக மிக அழகாக இருந்தாள். பரத் தன்னையுமறியாமல், வாய் பிளந்தான்.
""அட, பாத்தது போதும்ங்க,'' லஷ்மி உலுக்க, பரத் அவளைப் பார்த்து. ""யார் இது?'' என்றான்.
""என்னோட ஸ்கூல்ல படிச்சவ, பேரு டெய்சி. ஸ்கூல் முடிச்சப்புறம், "டச்' விட்டுப் போச்சுங்க. கடைசியா ஊருக்கு போனப்ப, அவளப்பத்தி விசாரிச்சேன்... அவ, ஐ.ஏ.எஸ்.,க்கு டிரெய்னிங் எடுக்க டில்லிக்கு போயிருக்காளாம். ஆனா, அவளால இன்னும் முடிக்க முடியலையாம். அதனால, கல்யாணம் எதுவும் வேண்டாம்ன்னு, அங்கேயே இருக்காளாம், உங்க பிரச்னைய நான் யோசிக்கும் போது, எனக்கு ஒரு ஐடியா வந்தது. அவள ஏன் உங்க பார்ட்னரா நீங்க கூட்டிக் கிட்டு போகக்கூடாதுன்னு... ஆனா, அவக்கிட்ட இன்னும் பேசலீங்க, அவ, எனக்காக ஒத்துப்பான்னு தோணுதுங்க... அவளும் நல்ல பொண்ணுதாங்க.''
லஷ்மி சொல்ல, பரத் நம்பாமல் ஆச்சரியப்பட்டான்.
""லஷ்மி... எனக்கு இது சரியா வருமா, தப்பா வருமான்னு சொல்லத் தெரியல... ஆனா, முயற்சி செய்யலாம்ன்னு தோணுது. அதே நேரம் நானும், இந்த பொண்ணும், ஜோடியா கலந்துக்கறத நீ எப்படி எடுத்துப்பேன்னும் புரியல!''
""அட, அவ ஒரு நாள் உங்க கூட இருக்கப்போறா... அதுவும் பகல்ல, நானும் தான் டில்லி வர்றேனே... என்னால நீங்க விரும்புற மாதிரி இருக்க முடியல, அதனால... இதுக்கு விட்டுக் கொடுக்கறது தப்பில்லீங்க. நீங்களும் சரி... அவளும் சரி எனக்கு வேண்டியவங்க. அதனால, நீங்க குழம்பாதீங்க.''
""இந்த போட்டோ?''
""இது எங்க பேர்வெல் பார்ட்டில எடுத்ததுங்க. அதுலேந்து உங்களுக்கு காட்ட தனியா கட் செய்து, பெருசு செய்தேன்.''
""லஷ்மி, நீ, இந்த அளவுக்கு விட்டு கொடுக்க... நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். நீ சீக்கிரம், இவங்க கிட்ட பேசு. எனக்கு, இப்ப ஓரளவு நம்பிக்கை வந்திருக்கு லஷ்மி... நான் நெனச்ச மாதிரி எல்லாம் சக்சஸ் ஆனா, நம்ம வாழ்க்கை எங்கயோ போய்டும்.''
உற்சாகமானான் பரத். தொடர்ந்து, ""அவங்க ஓ.கே., சொன்னா... அவங்களோட ரீசன்ட் போட்டோவ, "இ - மெயில்' செய்ய சொல்லு. அத வெச்சு நான், "அப்ளை' செய்யணும்.''
பரத் கேட்க... ""சரிங்க... ஊர்ல அப்பாவுக்கு போன் செய்து, அவ போன் நம்பர் எப்படியாவது வாங்கறேங்க,'' லஷ்மியும் ஆர்வமாக சொன்னாள்.மகளின் விருப்பத்திற்காக, காரணம் கூட கேட்காமல் லஷ்மியின் அப்பா, கொஞ்சம் மெனக்கெட்டு டெய்சியின் நம்பரை வாங்கி தந்தார்.
லஷ்மி, டெய்சியை தொடர்பு கொள்ள, உற்சாகத்தை கொட்டினாள் டெய்சி.
பரஸ்பர விசாரிப்பிற்கு பின், லஷ்மி... அந்த வித்யாசமான கோரிக்கையை, கொஞ்சம் தயக்கத்துடன் சொல்ல, எதிர்முனையில் மவுனம் நிலவியது,
""என்ன டெய்சி... ஏதாவது பேசுடி,'' குரல் கொடுத்தாள் லஷ்மி .
""லஷ்மி... நீ சீரியசா கேக்கறியாடி?''
""ஆமாண்டி.''
""இல்ல... வந்து நான், இங்க ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்கேன். ஸோ, எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஒரு ஹெல்ப்பா செய்யலாம் தான்... ஆனா, உனக்கு சென்டிமென்டா எந்த பீலிங்கும் கிடையாதா?''
டெய்சி சந்தேகமும், குழப்பமுமாக கேட்டாள். ""டி... அதப்பத்தி நீ ஏன் கவலைப்படற... எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நீ அவர் கூட காலையில் போகப்போற, ஒரு நாலு மணி நேரம் சிரிச்சுகிட்டு இருக்கப்போற... எல்லாம் பரத் பாத்துப்பாருடி. இதுல என் புருஷனோட எதிர்காலமே அடங்கியிருக்குடி.''
லஷ்மி மீண்டும் வேண்ட, அரைமனதோடு ஓ.கே., சொன்னாள் டெய்சி.
""ராத்திரி பரத், போன்ல பேசுவார்டி,'' சொல்லி போனை வைத்தாள், லஷ்மி.
அன்றிரவு லஷ்மி அருகிலிருக்க, டெய்சியுடன் பேசினான் பரத். "இட்ஸ் ஓ.கே., சார். என் தோழிக்காக செய்யறேன்...' முடிவாக டெய்சி சொல்ல, ""ஓ.கே., டெய்சி... அடுத்த சனிக்கிழமை அங்க பார்ட்டி. தவிர, டிரஸ்... அப்புறம் சில டீடெய்ல்ஸ் பத்தி, "இ-மெயில்' செய்யறேன்; ரொம்ப தேங்க்ஸ் டெய்சி,'' என்றான் பரத்.
அடுத்த சில நாட்களில், டெய்சியின் முழு உருவ போட்டோவுடன் தன்னை இணைத்து மேக்சி சைசில், ஒரு போட்டோ தயாரித்து லஷ்மியிடம் காட்டினான் பரத்.
ஜோடிப் பொருத்தம் சூப்பராக இருக்க, லஷ்மிக்கு முதன் முதலாக, ஒரு சின்ன நெருடல் மனதில் ஏற்பட்டது.
அந்த முக்கியமான நாளுக்கு, இரண்டு நாட்கள் முன், பரத்தை அலுவலக ஊழியர்கள் வாழ்த்த, லஷ்மியுடன் ஏர்போர்ட்டிற்கு புறப்பட்டான் பரத்.
விமானம் டில்லியை அடைய ஏர்போர்ட்டில் வெள்ளை நிற உடையில், ஒரு தேவதையாக டெய்சி, அவர்களை வரவேற்றாள். மூவரும் ஏற்கனவே, "புக்' செய்திருந்த, ஓட்டலுக்கு சென்று, அவர்களுக்குரிய அறைக்குள் நுழைந்தனர்.
""டெய்சி... வெரி வெரி தேங்ஸ் பார் யுவர் கம்பெனி,'' மீண்டும் ஒரு முறை சொன்னான் பரத்.
""நீங்க சொன்ன மாதிரி, ப்ரவுன் கலர்லேயே காக்ராசோலி டிரஸ் வாங்கிட்டேன் பரத்.''
""எஸ், டெய்சி... எங்க கம்பெனி பேரு ப்ரவுன் பேர்ல்... சாப்ட் சொல்யுஷன். ஸோ, நாம அத ட்ரஸ்லேயே சிம்பாலிக்கா காட்டப்போறோம். நீங்க... ப்ரென்ட்ல ஓரமா விழற முடிய இன்னும் ஷாட் செய்துருக்கணுமே.''
பரத்தும், டெய்சியும் பரஸ்பரம் சகஜமாக டிஸ்கஸ் செய்ய, ஓரமாக ஒதுங்கினாள் லஷ்மி . அங்கு ஒரு வித ஏக்கத்துடன் நின்றால், அவர்களுக்கு அது தர்ம சங்கடமாக இருக்கும் என்று புரிந்து கொண்டாள்.
அந்த முக்கியமான நாளும் வந்தது. நகரின் பெரிய ரெசிடென்ஷியல் ஓட்டல் ஒன்றின் ரூப் கார்டனில், பி.பி.எஸ்.எஸ்.சின் நியூயார்க் பிரசிடென்ட் பிரடெரிக் முன்னிலையில், இந்தியாவின் எட்டு கிளைகளின் எம்.டி.,களும் தங்கள் இணையுடன் குழுமியிருந்தனர். உயர் ரக மதுபானங்கள் பரிமாறப்பட, பரத் ஒரு, "சிப்' அருந்தினான்; கூடவே டெய்சியும் அருந்தினாள்.
அதே நேரம், லஷ்மி தன் அறையில், தான் கையோடு கொண்டு வந்திருந்த சாமி படத்தின் முன், கணவன் வெற்றி பெற பூஜை செய்து கொண்டிருந்தாள்.
இரண்டு மணிநேரம் சென்றிருக்கும். கதவு தட்டப்பட, லஷ்மி லென்ஸ் வழியாக கதவை ஊடுருவ வெளியில், பரத்.
வேகமாக கதவை திறந்தவள், ""என்னாச்சுங்க... சக்ஸசா... டெய்சி எங்க?'' கேள்விகளை அடுக்கினாள்.
ஆனால், அவள் எதிர்பார்ப்பிற்கு மாறாக பரத்தின் முகம் சோகத்தில் மூழ்கி வாடிப்போயிருந்தது.
""ஏங்க... நம்ப ப்ளான் சரிப்படலியா?''
மீண்டும் கேட்டாள் லஷ்மி. பரத்... லஷ்மியை சற்று நேரம் உற்றுப் பார்த்தான். பின், குனிந்து அவள் கால் விரல்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான்.
லஷ்மி ஷாக்கடித்தது போல் துடித்தாள்,""என்னங்க என்ன செய்றீங்க,'' சட்டென்று விலகினாள்.
பரத் கண்கள் கலங்க தளர்வான நடையுடன் சோபாவில் அமர்ந்தான்.
""லஷ்மி,'' கூப்பிட்டான் பரத். அருகில் வந்தாள் லஷ்மி.
""லஷ்மி... நானும், உன் தோழியும், ஒரு பத்து நிமிஷம் தான் பார்ட்டியில இருந்தோம். உடனே ஒரு அர்ஜென்ட் போன்ன்னு சொல்லிட்டு வெளில வந்துட்டோம். நாங்க அட்டெண்ட் செய்யலை... அவ ஹாஸ்டலுக்கு போய்ட்டா... நான் இங்க வந்திட்டேன்.''
பரத் சொல்ல திகைத்தாள் லஷ்மி.
""என்னங்க சொல்றீங்க... இதுக்காகவா நாம கஷ்டப்பட்டோம்?''
""பொறு லஷ்மி... நாங்க வெளில வந்ததுக்கு காரணம், அந்த பிரடெரிக்கோட பேச்சு... அவரோட ஸ்பீச் இங்கிலிஷ்ல இருந்தது. ஆனா, கருத்து... ஒவ்வொரு மனுஷனுக்கும் தேவையானதா இருந்தது. குறிப்பா, என்ன மாதிரி படிச்ச முட்டாளுக்கு சவுக்கடியா இருந்திச்சு லஷ்மி,'' பரத் சொல்ல, கேள்விக் குறியோடு, பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் லஷ்மி.
""அவரு சொன்னாரு... "நான் இந்த ப்ராஜக்ட்ட ஒரு இந்தியனுக்கு கொடுக்க ஆசைப்பட்டதுக்கு காரணம், உலகத்துல இந்தியா தான் கலாசாரத்தின் தாய். குடும்பம்ங்கிற ஒரு அமைப்பை கடவுளவிட மேலா கொண்டாடுறாங்க, மேலழகுக்கு அடிமையாகாம ஒரே பெண்ணோட தங்கள் வாழ்நாளை பகிர்ந்துக்கறாங்க.
""ஆணும், பெண்ணும் சக... நல்ல, கெட்ட குணங்கள, "அட்ஜஸ்' செய்து வாழ்றாங்க... அதப்பாத்து வர்ற, அடுத்த தலைமுறையும்... நிலையான ஒரு வாழ்க்கை தத்துவத்தை அப்பா, அம்மாகிட்டேயிருந்து கத்துக்கறாங்க... உலகத்துல பல இடங்கள்ல மனுஷன் காட்டுமிராண்டித் தனமா இருந்தப்ப, இந்திய நாகரிகம் உச்சத்துல இருந்தது. அதுல குறிப்பா, ஒருவனுக்கு ஒருத்திங்கற கான்சப்ட்ல; மத்த நாடுங்க இன்னும் முழுமை அடையல. பணம், அந்தஸ்து, சுகத்துக்காக பெண்களை, ஒரு கன்ஸ்யூமர் புராடெக்டா... பாக்குற உலகத்தல, பெண்ணை தங்களைவிட மேலா பாத்துக்கற ஆண்கள். அதுவும், உலக விஞ்ஞான பொருளாதார முன்னேற்றத்துக்கு ஈடுகொடுக்கும் ஆண்கள், இந்தியாவுல தான் இருக்காங்க. இவங்கள்ல ஒருத்தருக்கு, இந்த ப்ராஜெக்ட்ட வழங்குவது தான் நியாயம். அது தான் என் விருப்பம்'ன் னு சொன்னாரு லஷ்மி.
""ஒரு மேல் நாட்டுக்காரன், எது மட்டம்ன்னு சொல்லி, என்ன மாதிரி ஆண்களை உயர்த்தி பேசறானோ... அது தான் முக்கியம். அதனால, வரப்போற பணம், அந்தஸ்து முக்கியம்ன்னு சொல்லி, நான் ரொம்ப கேவலமா நடந்துகிட்டத நெனச்சு, ரொம்ப அசிங்கமா உணர்ந்தேன் லஷ்மி. டெய்சியும் பீல் செய்தா, இதுக்கு மேலயும் நாங்க நடிச்சு, அங்க ஜெயிச்சாலும், தோத்தாலும் அது கேவலம். நம்ப கலாசாரத்தோட, ஒரு சின்ன துளி, இன்னும் என் ரத்தத்துல ஓடிக்கிட்டிருக்கு. அதனால, ஒரு பொய் சொல்லிட்டு வெளில வந்திட்டோம். இப்ப என் மனசுல, கொஞ்சமாவது ஒரு மனுஷனா நடந்துகிட்ட திருப்தி இருக்கு லஷ்மி.''
குரல் தழுதழுக்க தன் மன பாரத்தை இறக்கினான் பரத்.
""பணத்துக்காக, அந்தஸ்துக்காக, மனைவியோட இடத்துல இன்னொருத்திய, நீங்களா இருக்க சொன்னீங்க... நான் தானே ஐடியா கொடுத்தேன்.''
பரத், அவள் கையை பிடித்து சொன்னான். ""லஷ்மி... நீ கொடுத்த ஐடியா, கணவனே கண்கண்ட தெய்வம்ன்னு நெனக்கிற, கணவனுக்காக உயிரையும் கொடுக்கற, ஒரு உத்தமியோட யோசனை. ஆனா, அத புரிஞ்சுக்காம, அந்த உத்தமியோட இடத்துல வேற ஒருத்திய... அந்தஸ்து, பணத்துக்காக வெச்சுப் பார்த்த ரொம்ப கேவலமான ஆண் நான் லஷ்மி. எவ்வளவு கொட்டி கொடுத்தாலும், அந்த புனிதமான இடத்த யாராலும் நிரப்ப முடியாது லஷ்மி... இத ஒரு வெளிநாட்டுக்காரன் சொல்லி, நான் புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு, உன்னவிட எதுவுமே முக்கியமில்ல லஷ்மி.''
லஷ்மி மடியில் தலை சாய்த்து, ஒரு குழந்தை போல தேம்பினான் பரத். லஷ்மி பரத்தின் தலையை தடவி கொடுக்க, அவர்கள் தாம்பத்தியம் சங்கீதமாக மாறியது.

 நன்றி : தினமலர்

Tuesday 9 July 2013

மேனேஜரும் நம்மளும்

மேனேஜரும் நம்மளும்... :

ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.

உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..
தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்..



 ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா…சோம்பேறி.

அவராலே செய்ய முடியலேன்னா….. நேரம் இல்லே..


எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா… முட்டாள்தனம்

அவர் பண்ணினா.. அவரும் மனுஷந்தானே.. கடவுளா..?


நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்

அவர் செஞ்சா.. முன்னுதாரணம்..
\

நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா.. பிடிவாதம்..

அவர் அப்படி நெனைச்சா… கொள்கையில் உறுதி..


நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா.. காக்கா பிடிக்கறீங்க.

அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா.. ஒத்துழைப்பு.. பணிவு..


நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா.. ஊர் சுத்தறீங்க...

அவர் இருந்தா.. பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கிறார்..


நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவுபோட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க..

அவர் லீவு போட்டா.. ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்..

# என்ன உலகமடா இது..????



ரியல் எஸ்டேட் டூர் போலாமா?



சென்னைக்கு மிக அருகில் திண்டிவனமும் மிகமிக அருகில் பாண்டிச்சேரியும் இருப்பது ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் சொல்லித் தெரிந்திருக்கும் உங்களுக்கு. மத்தியான நேரத்தில் (அதுகூடப் பரவாஇல்லைங்க...

சமயங்களில் நள்ளிரவில்கூட!) டி.வி-யைத் திருப்பினால்... சீரியல் நடிகைகள் ஹெவி மேக்கப்பில் வந்து, 'இந்த இடம் தாம்பரத்துலேர்ந்து தாண்டிப்போற தூரம்தான், வந்தவாசியில் இருந்து வாக்கபிள் டிஸ்டன்ஸ்தான்’ என்று குளோஸப் கேன்வாஸ் செய்வார்களே... அதே விளம்பரங்கள்தான்.
கூடுவாஞ்சேரி தொடங்கி திண்டிவனம் வரை சாலையின் எந்தப் பக்கம் திரும்பி னாலும் பளபளப்பான ரியல் எஸ்டேட் சைட்டுகள் மின்னுகின்றன.

'ஹைவேஸ் சிட்டி’, 'செந்தமிழ் நகர்’, 'குமரன் நகர்’, 'ஜே.கே. கார்டன்’ என மானாவாரி நிலங்களை பிளாட் பிரித்து மானாவாரியாகப் பெயர் வைத்திருக்கின்றனர். ஐ.நா. சபை அலுவலகம் ரேஞ்சுக்கு கலர் கலர் கொடி கள் வேறு. ஹாலோ பிளாக் சுவர்களில் ஃப்ளோரசன்ட் பெயின்ட் கண்களைப் பறிக்கிறது. வெயில் பிளக்கும் மத்தியான நேரத்தில் டெம்போ டிராவலரில் வந்து இறங்குகிறது மக்கள் கூட்டம். ''இடம் எல்லாம் நல்லாதான் இருக்கு.

ஆனா, சுத்தி நாலஞ்சு கிலோ மீட்டருக்கு ஒரு குடிசை யைக்கூடக் காணலையே... டெவலப் ஆகுமா?'' என கூல் டிரிங்க்ஸை உறிஞ்சிய படியே கணக்குப் போடுகின்றனர். என்னதான் நடக்கும் அந்த ரியல் எஸ்டேட் சைட் சீயிங்கில்?

'சைட்டைப் பார்வையிட எங்கள் குரோம்பேட்டை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் வாகன வசதி உண்டு’ - என்ற விளம்பரத்தைப் பார்த்து, நம்பரை டயல் செய்தேன். ''அந்த வெல்கம் சிட்டி சைட்டுங்களா, அது முடிஞ்சிருச்சே... ஒரே ஒரு கார்னர் பிளாட் மட்டும்தான் இருக்கு. ஸ்கொயர் ஃபீட் 170 ரூபாய். அதுக்குப் பக்கத்துலயே இன்னொரு லே-அவுட் போட்டிருக்கோம்.

ரெண்டையுமே பார்க்கலாம். நாளைக்குக் காலையிலயே வந்துடுங்க!''- சொன்னதோடு நிற்காமல், அடுத்த நாள் காலை எட்டு மணிக்கே போன் செய்து நினைவூட்டினார். 'வாங்குறவனைவிட விக்கிறவன் சுறுசுறுப்பா இருக்கானே’ என யோசித்தபடி குரோம்பேட்டை அலுவலகம் சென்றால், அங்கு ரேஷன் கடைக் கூட்டம்.

வந்திருந்தவர்களில் சரிபாதிப் பேர் வெல்கம் சிட்டியில் இடம் வாங்கி, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் பத்திரப் பதிவு செய்ய வந்தவர்கள். மீதிப் பேர் இடம் வாங்க வந்தவர்கள்.

எல்லோருடைய முகங்களிலும் குழப்பம், மகிழ்ச்சி, டென்ஷன், கவலை எனக் கலவையான உணர்ச்சிகள். மனைவி, குழந்தையோடு வந்திருந்தவரைப் பார்த்துச் சிரித்தேன். அவருக்கு என்ன புரிந்ததோ... ''அப்புறம் இவளுக்கு இடத்தைக் காட்ட இன்னொரு தடவை போகணும். அடிக்கடி போயிட்டு வர இடம் என்ன பக்கத்துலயா இருக்கு? இங்கேருந்து மேல்மருவத்தூர் போகணும்ல...'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

''மேல்மருவத்தூரா... எது?
'சென்னைக்கு மிக அருகில்’ இருக்கே அதுவா?'' என்றதும் அதற்கும் சிரித்தார்.

''அதுக்கு என்ன சார் பண்றது? நாம என்ன அடையாறுலயா இடம் வாங்க முடியும்? இருக்குற ரெண்டு, மூணு லட்சத்துக்கு அங்கேதான் போகணும். விலை ஏறுனா சரி!'' என்றார். ஏறும் என்று நினைத்துதான் இத்தனை பேரும் கிளம்பி வந்திருக்கிறார்கள். ஆனாலும் நடுத்தரவர்க்க பிராண்ட் பயம் விலகவில்லை.

சினிமா முடிந்து வெளியே வருபவர்களிடம், 'படம் எப்படி?’ எனக் கேட்பதுபோல... ஏற்கெனவே இடம் வாங்கியவர்களிடம் 'இடம் எப்படி?’ என்று விசாரணையைப் போடுகின்றனர். அவர் என்னத்த சொல்வார்... ''ஆமாங்க... ரேட் ஏறும்னு சொல்றாங்க. பக்கத்துலயே புதுசா காலேஜ் ஒண்ணு வரப்போகுதாம்ல!'' என அவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் ஆறுதல் அவர்களுக்கும் ஆறுதலாக இருக்கிறது.

சென்னைக்குப் பக்கத்து மாவட்டங்களில் 10 ஏக்கர், 20 ஏக்கர் என மொத்தமாக நிலத்தை வாங்கி, அதை பிளாட் பிரித்து 'ஹை ஸ்டைல் கார்டன்’, 'நியூ சிட்டி அவென்யூ’ என்று பெயர்வைத்து விற்கின்றனர். இந்த இடத்தைப் பார்வையிட ஒவ்வொரு நாளும் நகரத்தில் இருக்கும் அவர்களது அலுவலகத்தில் இருந்து இலவசமாக அழைத்துச் செல்கின்றனர். இதற்காகவே டெம்போ டிராவலர் வேன்களை வாங்கி வைத்துள்ளனர். திருவள்ளூர் பக்கம் லே-அவுட் போட்டிருப்பவர்கள், வாடிக்கையாளர்களை மின்சார ரயிலில் அழைத்துப்போகிறார்கள்.

வந்திருந்த குரூப்பை இரண்டாகப் பிரித்து பத்திரப் பதிவுக்குப் பாதியையும், இடத்தைப் பார்க்க மீதியையும் அனுப்பிவைத்தார்கள். வேனில் ஏறி 10 நிமிடம்கூட இருக்காது. உள்ளே இருந்த டி.வி-யில் ஒரு சீரியல் நடிகை வந்து 'பாருங்க... இந்த இடம் ஹைவேஸுக்கு எவ்வளவு பக்கத்துல இருக்குனு...’ என்று பேச ஆரம்பித்தார். ஒரு பாட்டு. மறுபடியும் அந்த விளம்பரம். இரண்டு மணி நேரத்துக்கு இதையே 'ரிப்பீட்’ ரிவிட் அடித்தார்கள்.
இந்த ரியல் எஸ்டேட் டி.வி. விளம்பரங்கள் கொடுமையிலும் கொடுமை. அதில் கேமராமேனாகப் பணிபுரியும் நண்பர் ஒருவர், ''போன வாரம் திருத்தணி பக்கம் ஒரு ஷூட். டி.வி. நடிகர் சஞ்சீவ்தான் ஆங்கர். மொத்தம் 5 டிஜிட்டல் கேமரா, 10 பார் லைட் செட்டப். ஜிம்மி ஜிப் வேற. சினிமா ஷூட்டிங்குக்கே இவ்வளவு பிரமாண்டம் இருக்காது. அன்னைக்கு ஒரு நாள் செலவு மட்டும் 15 லட்ச ரூபாய்!'' என்று மலைக்கவைத்தார். ஆள் இல்லாத வனாந்திரத்துக்குள் நாலு கல்லை நட்டுவைத்து, 1,200 சதுர அடி ரூபாய் 2 லட்சம் என்று விற்று இதைச் சம்பாதிக்கிறார்கள்.

அதிலும் ஒரு மரம்கூட இல்லாத அந்தப் பொட்டல் காட்டில் ஒரு ஊஞ்சல் வைத்திருப்பார்கள். சறுக்கு மரம் இருக்கும். சன்பாத் எடுப்பதுபோல் ஒரு சிமென்ட் குடை இருக்கும். லே-அவுட்டின் நுழைவு வாயிலில் ஸ்டைலான ஆர்ச் இருக்கும். எதற்கு இதெல்லாம்?
''எல்லாம் உங்களை ஏமாத்தத்தான். டி.வி. விளம்பரம் அழகா வர்றதுக்காகக் கொண்டுவந்த செட்டப் இது. இப்போ நடுக் காட்டுக்குள்ள லே-அவுட் போட்டு அங்கேயும் கலர் கலராக் கொடிகளை நட்டுவைக்கிறாங்க!'' என்கிறார் அந்த நண்பர்.
இந்த லே-அவுட்கள் அனைத்தும் நகரத்தில் இருந்து பல கிலோ மீட்டர்கள் வெளியில்தான் இருக்கின்றன. பெரும்பாலான கல்லூரிகளும் சிட்டி லிமிட்டுக்கு வெளியில்தான் உள்ளன. உடனே, இவர்கள் 'வொய்டு ஆங்கிளில்’ கேமராவை வைத்து, 'பார்த்தீங்களா... ஜி.ஜி.ஜி. இன்ஜினீயரிங் காலேஜ் எவ்வளவு பக்கத்துல இருக்குனு?’ என்பார்கள். தூரத்தில் ரோட்டில் ஒரு பஸ் போகும். அதை ஜூம் செய்து, 'மெயின் ரோட்டுக்குப் பக்கத்துலயே உங்க இடம்’ என்று பின்னணிக் குரல் போகும். பஸ் போறதெல்லாம் சரி... அந்த இடத்துல நிக்குமா?
இன்னும் சில விளம்பரங்களில், 'நாம இப்போ இருக்கிறது திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட்ல’ என்று திண்டிவனம் பேருந்து நிலையத்தைக் காட்டுவார்கள். பிறகு, அந்தத் தொகுப்பாளர் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி, 'நம்ம சைட்டுக்கு ஷேர் ஆட்டோகூட இருக்கு’ என்பார். இறங்கியதும், 'பார்த்தீங்களா... மூணு கிலோ மீட்டர்தான். அஞ்சே நிமிஷத்துல வந்தாச்சு...’ என்று அடுத்த பிட்டைப் போடுவார். யாரும் இல்லாத ரோட்டில், அஞ்சு நிமிஷத்துல வர்றதுல என்ன பெரிய சிக்கல்?!
நான் சென்ற வேன், சில பல கிராமங்களை ஊடுருவிச் சென்றது. 'சாலவாக்கத்துல ஒரு பார்ட்டியை இறக்கிவிட்டுட்டுப் போயிருவோம்’ என்று எங்கெங்கோ கிராமங்களுக்குள் புகுந்து சென்றார் டிரைவர். பெய்யூர் என்ற பச்சைப் பசேல் கிராமத்தில் இன்னமும் முழு வேகத்தில் விவசாயம் நடக்கிறது. கொஞ்சமும் நகரத்துச் சாயல் இல்லை. அங்கு விவசாய நிலங்களுக்கு நடுவே 'டிரினிட்டி பார்க், கிரீன் சிட்டி அவென்யூ’ பெயர்ப் பலகைகள் எங்களை வரவேற்றன. அந்தப் பெயர்ப் பலகைகளுக்கு அருகிலேயே 'வாழ்ந்து காட்டுவோம்’ அறிவிப்புப் பலகை யாருக்கோ சவால்விடுகிறது.

மேல்மருவத்தூரில் ஒரு ஹோட்டலில் எல்லோருக்கும் லஞ்ச். லே-அவுட்டைப் பார்க்க வருபவர்களுக்கு போக்குவரத்துடன் சேர்த்து மதிய உணவும் இலவசம். பேச்சுலர்ஸ் பலர் ஞாயிற்றுக் கிழமைகளில் இன்பச் சுற்றுலாபோல இவர்களுடன் கிளம்பிவிடுகின்றனர். ஒரு நாள் ஜாலியாகக் கழிவதுடன் சாப்பாடும் இலவசம்.

எங்கள் வேன், மேல்மருவத்தூர் கோயிலுக்கு முன்பாக வலது புறம் திரும்பி உள்ளே நுழைந்தது. 'நம்ம சைட்டுக்குப் போற ரோடு இதுதான் சார். நாலே கிலோ மீட்டர்தான். அஞ்சு நிமிஷம்கூட ஆகாது’ என்று வேனில் இருப்பவர்களுக்குச் சொல்லிக்கொண்டே வருகிறார் புரோக்கர். வறண்ட பொட்டல்பூமியில் வளைந்து திரும்பி வேன் நின்றால், டி.வி-யில் பார்க்கும் நூற்றுக்கணக்கான லே-அவுட்டுகளின் அதே சாயல். ஊஞ்சல், சறுக்கு மரம், ஐ.நா. சபைக் கொடிகள் அனைத்தும் உண்டு.

'அந்தா பாருங்க... பக்கத்துலயே மெயின் ரோடு. இந்தா பாருங்க... இங்கேயே ஈ.பி. லைன்’ என, 'பாத்ரூம் குளிக்கலாம், பெட்ரூம் தூங்கலாம்’ மாதிரி சளைக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார் புரோக்கர். லே-அவுட் பேப்பரை உற்றுப் பார்த்து யோசிப்பவர்களிடம், ''நம்ம சைட் எல்லாமே பக்கா டாக்குமென்ட் சார். ஒரிஜினல் பட்டா லேண்ட். நாங்களே வில்லங்கம் பார்த்துத் தருவோம். இடத்துக்கும் எந்தப் பிரச்னை யும் வராது. சுத்தியும் கம்பி வேலி போட்டிருக்கு பாருங்க...'' என்ற எக்ஸ்ட்ரா பிட்டுகளைப் போடுகிறார்.

ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இந்த வேலி, பஸ் போகும் ரோடு, பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன், 30 அடியில் குடிநீர்... இதெல்லாம் அல்வா மாதிரி.
அந்தக் கிராமத்து மக்களோ தினமும் சர்சர்ரென கார்களில் வந்துபோகிறவர்களைக் கொஞ்சம் மிரட்சியோடும் கொஞ்சம் பரிதாபமாகவும் 'பலியாள்’போலப் பார்க்கிறார்கள். கடும் பில்டப்புடன் இடத்தைப் பார்க்க வருபவர்களுக்கு தங்கள் மனதில் இருந்த கற்பனை உடைந்துபோன ஏமாற்றம். வேறு சிலரோ தேர்ந்த அனுபவசாலிகள். ''எல்லா இடமும் பார்க்க இப்படித்தான் சார் இருக்கும். நாலு வருசத்துல எல்லாம் வளர்ந்துடும்'' என்கிறார் கௌரிவாக்கத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி நிர்மலா. கணவரை வேலைக்கு அனுப்பிவைத்துவிட்டு இங்கு கிளம்பிவந்திருக்கிறார்.

''சுதாரிச்சுக்கணும் சார்... இப்பவே இந்த ரேட்டு சொல்றான். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுப் பார்த்தா, வாங்குறதுக்கே இடம் இருக்காது'' என்கிறார் நிர்மலா. ரியல் எஸ்டேட் கம்பெனிகள் ஒரு லே-அவுட் முடிந்து இன்னொன்று, அது முடிந்து அடுத்தது எனப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். சென்னை மட்டும் அல்ல... தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இதுதான் நிலைமை.
ஏதோ ஒரு மாய மந்திரம் நிகழ்ந்து 'படையப்பா’ ரஜினிபோல ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆகி விடமாட்டோமா என்ற 'மிடில் கிளாஸ் மாதவன்’களின் நம்பிக்கையில், வாரக் கடைசிகளில் கலகலவென அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன ரியல் எஸ்டேட் இன்பச் சுற்றுலாக்கள்!

 NANDRI : ஆனந்த விகடனில் இருந்து...

உயிர்களின் ஆதாரமே தண்ணீர்... தண்ணீர்!

தண்ணீர்... தண்ணீர்!
யிர்களின் ஆதாரமே தண்ணீர். மரமோ மனிதனோ... எதுவாக இருந்தாலும் இயக்கத்தின் உயிர்நாடி காற்றுக்கு அடுத்தபடியாக இருப்பது தண்ணீர்தான்.
மனித உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் இருக்கிறது. சராசரி மனித எடையில் (70 கிலோ) தோராயமாக 42 லிட்டர் தண்ணீர் உள்ளதாக உடலியல் உலகம் சொல்கிறது. அதாவது மொத்த உடல் எடையில் தண்ணீரின் அளவானது 60 சதவிகிதம். ஆனாலும், திசுக்களுக்குத் திசு தண்ணீரின் அளவு மாறுபடும்.

அதிகபட்சமாக ரத்தத்தின் திரவப் பகுதியான பிளாஸ்மாவில் 93 சதவிகிதத் தண்ணீரும் குறைந்தபட்சமாக எலும்பில் 20 சதவிகிதத் தண்ணீரும் உள்ளது. மூளையில் 70 சதவிகிதம், தசைகளில் 75 சதவிகிதம், இதயத்தில் 75 சதவிகிதம், நுரையீரலில் 75 முதல் 80 சதவிகிதம். ஆணின் தோலில் 60 சதவிகிதமும் பெண்ணின் தோலில் 57 சதவிகிதமும் தண்ணீர் உள்ளது. உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறையும்போது அது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும்.
மூளையில் உள்ள 70 சதவிகிதத் தண்ணீரில் ஒரு சதவீதம் குறைந்தால்கூட, மனச் சோர்வு, ஒற்றைத் தலைவலி போன்ற பாதிப்புகள் வரும். ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது அதில் உள்ள அணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு மூளையில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதை சாஜிட்டல் சைனஸ் த்ராம்போசிஸ் என்று கூறுவோம். தசைகளில் தண்ணீர் அளவு குறையும்போது, உடல் வலி, தோல் சுருங்குதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும் ரத்த அழுத்தக் குறைவு, சிறுநீரகப் பாதிப்பு, சிறுநீரகத்தில் கல் உருவாதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். 20 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் குறையும்போது உயிரிழப்பு அபாயம்கூட நேரிடலாம்.

ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும்கூட மூச்சை இழுத்து வெளியே விடுவதன் மூலமும் தோலில் இருந்தும் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 800 மி.லி. தண்ணீர் பயன்படுத்தப்பட்டுவிடும். இதைத் தவிர, வியர்வை மூலம் 100 மி.லி., சிறுநீர் மூலம் குறைந்தபட்சம் 500 மி.லி., மலம் மூலம் 200 மி.லி. தண்ணீர் வெளியேறுகிறது. ஆக, எந்த வேலையும் செய்யாமல் இருந்தால்கூட 1600 மி.லி. தண்ணீர் நம் உடலைவிட்டு வெளியேறிவிடும்.

இதேபோல், வளர்சிதை மாற்றங்கள் காரணமாக நம் உடலில் 400 மி.லி. அளவுக்குத் தண்ணீர் உற்பத்தி ஆகிறது.

ஆக்சிஜனை திசுக்களின் உள்ளே செலுத்துவதற்கும் உயிர்ச் சத்தை உறிந்துகொள்வதற்கும் தண்ணீரின் பங்கு மிக முக்கியம். உணவில் உள்ள நச்சுப்பொருட்களை நீர்த்துப்போகச் செய்வதுடன், மனத்தளர்வு, மனச்சோர்வையும் போக்குகிறது தண்ணீர். மூளையில் மகிழ்ச்சியான நிலையை ஏற்படுத்தும் 'செரோடோனின்’ என்ற நியூரோ டிரான்ஸ்மீட்டரை ஊக்குவிக்கிறது.

'மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் இரவு வேளை வந்ததும் தூங்குவதற்கான மனநிலையை ஏற்படுத்தும். உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது இந்த ஹார்மோனின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை பிரச்னை தலை தூக்கும்.

உடலுக்குப் போதுமான அளவில் தண் ணீர் கிடைக்காதபோது, உடல் தானாகவே தேவையைக் குறைத்துக்கொள்ளும். அதன் வெளிப்பாடாக சிறுநீர் வெளியேறுவது குறைந்துவிடும். சிறுநீர் கழிக்கும்போது கடுகடுப்பு, அடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாகவோ சிறுநீர் பிரிதல், அதிகத் தாகம், பசி, சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடலில் தண்ணீர் அளவு குறைந்துள்ளதாக அறியலாம்.

காலையில் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும். ஒற்றைத் தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலியும் குறையும். மலச் சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படும். தோலில் சுருக்கம் மறையும். வேலை செய்வதற்கான அதிகத் திறனைக் கூட்டவும் தண்ணீருக்கு நிகர் வேறு இல்லை. பாக்டீரியா கிருமிகளை வேகமாக வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று, கல் வராமல் தடுக்கும். குடல் மற்றும் நீர்ப் பையில் ஏற்படும் புற்றுநோய்க் காரணிகளை நீர்த்துப்போகச் செய்து அதன் வீரியத்தைக் குறைக்கும்.

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. இந்த அளவுக்கும் மேலாகத் தண்ணீர் குடித்தால், சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும். ஒரே நேரத்தில் மொத்தமாக இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்தால், உடலில் தண்ணீரின் அளவு அதிகமாகி, ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவு குறைந்து, ரத்த நாளங்கள் சுருங்குதல், அடைப்பு ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். எனவே, இடைவெளி விட்டு தண்ணீர் குடிப்பதே நலம்!

கடவுள் இருக்கிறார்

  • மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே.
  • ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.
  • மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.
  • பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.
  • மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.
  • தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
  • அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
  • பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.
  • பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.
  • எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.
  • வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.
  • நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.
  • நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.
  • ஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.
  • ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.
  • உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.
  • ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.
  • நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
  • நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்.

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பொன்மொழிகள்

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பொன்மொழிகள்

நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.

இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!

அல்லாவின் ஆணை இல்லாமல் எதுவுமே நமக்குக் கிடைக்காது! அவரே நமது பாதுகாவலன்! என் மகனே! அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்!

கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!

ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது!

இந்தச் சக்தி உங்களுடைய லட்சியங்களை எட்டுவதற்கும் கனவுகளை நனவாக்குவதற்கும் உதவி செய்யும்.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.

தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இதையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு! அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!

நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.

தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு. தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!

நமது ஆரோக்கியத்திற்கு கஷ்டங்கள் அவசியம் தேவை! நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வு பூர்வ சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும். என்பதை நாம் உணர வேண்டும்!

வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.

தேவையான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான் தமது அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும்.

வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம் சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர்தான்!

எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவர்ம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்!

கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.

சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.

ஒருபக்கம் இருநூறு முன்னூறு ஹீரோக்கள்; மறுபக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நாறு கோடி மக்கள்! இது மாற்றப்படவேண்டிய நிலவரம்.

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!

நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்...

.

• நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

• பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

• எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

• உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

• வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

• உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

• உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

• பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன்

• ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

• புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

• நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.

• பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.

• புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.
எமர்சன் எனும் தலைசிறந்த தத்துவ அறிஞரின் பொன்மொழிகள்



















 .
* நீங்கள் கோபப்படுகிற ஒவ்வொரு நிமிடமும் அறுபது நொடி இன்பத்தை இழக்கிறீர்கள்.

* உங்களை ஓயாமல் மாற்றிவிட முயற்சிக்கும் உலகத்தின் முன் உங்கள் சுயத்தை தக்கவைத்துக்கொள்வதே பெருஞ்சாதனை.

* உங்களுக்கு பின்னும், உங்களுக்கு முன்னும் இருக்கும் எவையும் பெரிய விஷயங்களே இல்லை. உங்களுக்கு உள்ளிருக்கும் ஆற்றல்தான் உலகின் மிகப்பெரிய அற்புதம்.

* எதை செய்ய அஞ்சுகிறீர்களோ, அதையே எப்பொழுதும் செய்யுங்கள்.

* உங்களைத் தவறாக உலகம் புரிந்துகொள்கிறது என அவமானமாக உணராதீர்கள். பிதாகரஸ், சாக்ரடீஸ், கலிலியோ, கோப்பர்நிக்கஸ், நியூட்டன், லூதர் கிங் என்று உலகின் பெருமனிதர்கள் எல்லாரும் தவறாகவே உணர்ந்து கொள்ளப்பட்டு காயப்படுத்தப்பட்டார்கள். உயர்ந்தவர் ஆக தவறாக புரிந்துக்கொள்ளப்படுவது அவசியம்.

* எல்லாரும் சென்ற பாதையில் பயணிக்காதே, யாரும் பயணிக்காத பாதையில் பயணித்து உன் சுவடுகளை விட்டுப் போ.

* நம்மின் மாபெரும் பெருமை எப்பொழுதும் தோற்காமல் இருப்பதில் இல்லை; ஒவ்வொரு முறை வீழ்கிற பொழுதும் அயராது கம்பீரமாக எழுந்து நிற்பதில் தான் இருக்கிறது.

* வாழ்க்கை ஒரு இடையறாத பயணம்; அது வெறும் இலக்கு அல்ல.

* மகிழ்ச்சியாக வாழ்வது வாழ்க்கையின் நோக்கமில்லை; பயனுள்ளதாக, மதிப்புமிகுந்ததாக, அன்பால் நிறைந்ததாக அந்த வாழ்க்கை அமையட்டும். வெறுமனே வாழ்வதற்கும் நன்றாக வாழ்வதற்கும் உள்ள வேறுபாடு இதுவே.
 
* வாழ்வின் நீளம் முக்கியமில்லை; ஆழமே முக்கியம்

 நன்றி ஆ.வி

சிறந்த பொன்மொழிகள்!

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

 2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். 
  
4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான். 

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம். 

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை. 

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

ஆலிவ் ஆயில்.

ஆலிவ் ஆயில்..

இதன் சிறப்பம்சம் மோனோ சாச்சுரேடட் ஃபேட்டி அமிலம் (Mono Unsaturated Fatty Acid) சுருக்கமாக - MUFA) 72% என்ற அளவில் இருப்பது. மேலும் வைட்டமின் E அதிக அளவில் இருகிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL (Low-density lipoprotein...லோ டென்சிடி லைபோபுரோடீன்) அளவை கார்டியா ரீஃபைன்ட் எண்ணை குறைக்கிறது. HDL(High-density lipoprotein ஹை டென்சிடி லைபோபுரோடீன்)என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது.

ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம் படியாது. இதனால் இதயத்தின் தசைகளின் அழுத்தம் குறையும். சிரமப்பட்டு ரத்தத்தை இதயம் பம்ப் செய்யவேண்டி இருக்காது. ரத்தத்தின் அழுத்தமும் அதிகரிக்காமல் சீராக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகின்றன. மாரடைப்புக்கான சாத்தியங்களும் குறையும்.

வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உட்கிரகிக்க இந்த எண்ணெய் உதவுகிறது.
இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்டுகள் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை வெகுவாகக் குறைக்கின்றன.

சூரியனில் இருந்து வரும் தீமை விளைவிக்கும் கதிர்கள் தோலைக் கருப்பாகவும் தடிமனாகவும் மாற்றும். ஆனால் இந்த

ஆலிவ் எண்ணெய் தீமை செய்யும் கதிர்களின் பாதிப்பில் இருந்து தோலைக் காக்கிறது. கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து தோல் இயல்பு நிறத்துக்குத் திரும்பும்.தோல் மென்மையாகவும் இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.

தினந்தோறும் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு (28 கிராம்)ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால் நல்லது. அன்றாட சமையலில் அனைத்துப் பதார்த்தங்கள் தயாரிக்கவும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். வதக்குவது, பொறிப்பது, தாளிப்பது, பூரி செய்வது போன்றவற்றுடன் இட்லிப் பொடியைக் குழைத்துச் சாப்பிடுவதற்கும் ஏற்றது.
வெல்லம்
.
ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்...ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.

பலன்கள் -

・ எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும்.

・ பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும்.

・ சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.

・ பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.

・ ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

・ பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை அனுபானமாகச் செய்து தரலாம்.

・ இந்த வெல்லத்தில் சமையலில் பயன்படுத்தும் போது சுவை அதிகரிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

・ வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.

・ ஹோட்டலில் அடிக்கடி சாப்பிடுவதால் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படும். மலம் சரிவர கழியாது. ஓமம், மிளகு வெல்லம் மூன்றையும் சம அளவில் (50 கிராம்) எடுத்து பொடி செய்து காலை மற்றும் இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டால் சூட்டினால் வரக் கூடிய வயிற்று வலி குறையும்.

・ குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும்.

அனீமியாவுக்கு இரும்புச் சத்தும் புரத உணவும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சத்துணவை தனித்தனியாக சாப்பிடுவதால் பெரியதாக பலன் எதுவும் இருக்காது. தேவைக்கேற்றபடி கலந்து சாப்பிட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

வெல்லத்தை வெல்கம் செய்து அனிமியாவுக்கு குட் பை சொல்வோம்!
ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?
 
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து அறிய சென்னையில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அணுகினோம். நம் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள் அவர்கள்.
ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!
ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.
எப்படி வருகிறது?
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன. இவர்களின் பணி வங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.
யாரை அணுகுவது?
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
வங்கி நடைமுறைகள்!
ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.
எஃப்.ஐ.ஆர். ஃபைல்!
பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களின் மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி.எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.
ஆர்.பி.ஐ.-ன் உதவி!
வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.''
இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்!

NANDRI : AV

குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்

குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.

ரசாயணங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் பெரிய அளவில் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.

5 ரகசியங்கள்!

அந்த 5 ரகசியங்கள்!)
























நீங்கள் எப்போது இறக்கத் தொடங்குகிறீர்கள்? இந்தக் கேள்விக்கு மிக நேர்மையான பதில்... 'பிறந்த அடுத்த நொடியில் இருந்து' என்பதுதானே! 'நான் உற்சாகமானவன், சாதிக்கப் பிறந்த வன்' என்றெல்லாம் நீங்கள் எகிடுதகிடு தன்னம்பிக்கை வார்த்தைகள் வாசித்தா லும், நிதர்சன உண்மை அதுதான்.
ஆக, இறப்புதான் (இந்த வார்த்தையை அடிக் கடி உபயோகிப்பதற்கு மன்னிக்கவும்!) நமது இலக்கு என்றால், அந்தப் பயணத்தைப் பக்காவாகத் திட்டமிட வேண்டும் அல்லவா? அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கு முன் நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து ரகசியங்களை உங்களுக்குச் சொல்கிறார் ஜான் இஸ்ஸோ தனது 'The Five Secrets You Must Discover before you die' புத்தகத்தில்.

'இவர் தனது வாழ்நாள் முழுக்கச் சந்தோஷமாகக் கழித்தார்!' என்று பலரால் சுட்டிக்காட்டப்பட்ட 200 நபர்களைப் பேட்டி எடுத்திருக்கிறார் ஜான். 60 முதல் 106 வயது வரையிலான அந்த 200 பேரின் 18,000 வருட அனுபவங்களைப் பொறுமையாகக் கேட்டு, இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார் ஜான். 'வாழ்க்கையில் உங்களுக்கு அதீத சந்தோஷத்தைத் தந்தது எது? வாழ்க்கை யில் நீங்கள் மிக முக்கியமாகக் கருதுவது எதை?' இவை போன்றவைதான் அவர்களிடம் ஜான் கேட்ட கேள்விகள். அந்தப் பதில்களைச் செதுக்கி, சீராக்கி, வடிகட்டி வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து ரகசியங்களைப் பட்டிய லிடுகிறார் ஜான். உங்களுக்கும் நிச்சயம் உதவும் ரகசியங்கள்...

1) உங்களுக்கு உண்மையாக இருங்கள்!

தனது 75 வயது ஆயுளில் ஜார்ஜ் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை பிசிக்ஸ் புரொஃபசராகக் கழித்திருக்கிறார். அவரிடம் மாணவர்களின் மனப்போக்கு குறித்துக் கேட்டேன். 'தனது இதயம் செலுத்திய பாதையில் பயணித்தவர்களுக் கும் அந்தப் பாதையைப் புறக்கணித்தவர் களுக்கும் இடையே மலையளவு வித்தியாசத்தை நான் கவனித்திருக்கிறேன். தனது தோளில் ஏற்றப்பட்ட பிறரது கனவுகள், ஆசைகள், லட்சியங்களை வேறு வழியில்லாமல் தூக்கிச் சுமந்த மாணவர்கள், வாழ்நாட்களைக் கழித் தார்கள். ஆனால், தனது மனம் விரும்பிய படிப்பைப் படித்த மாணவர்கள்தான் வாழ்ந்தார்கள். ஆயுளைக் கழிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஏகப்பட்ட வித்தியா சங்கள் இருக்கின்றன. தனக்கே உண்மையாக இல்லாதவர்கள் பிறருக்கு எப்படி உண்மையாக இருப்பார்கள்?' என்றார் அந்த புரொஃபசர்.

2) எந்த ஏக்கத்தையும் மிச்சம்வைக்காதீர்கள்!

84 வயது டோனல்ட் ஆறு வருடங்களுக்கு முன்தான் தனது பிரியமான மனைவியை இழந்திருந்தார். மனைவி யுடனான 56 வயது மணவாழ்க்கைதான் தனது ஆயுளின் ஆகப் பெரிய சொத்து என்று புளகாங்கிதப்பட்டார் டோனல்ட். 'கல்லூரியின் முதல் வருட வாழ்க்கை முழுக்க நான் அநியாயத்துக்கு கூச்ச சுபாவி. அப்போது எங்கள் கல்லூரியில் சேர்ந்தாள் அவள். க்ரீம் கலர் ஸ்வெட்டர் அணிந்து மிக மிருதுவான கூந்தலுடனும் தேவதைச் சிரிப்புடனும் வளைய வந்த அவளைச் சுற்றிலும் எப்போதும் அழகிய பெண்களின் கூட்டம்தான். அன்று காலேஜ் டே. தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நடனமாடலாம். அவளை என்னுடன் டான்ஸ் ஆட அழைக்கச் சொல்கிறது மனதின் ஒரு மூலை. பலவந்தமாகப் பிடித்துப் பின்னிழுக்கிறது மூளை. ஒரு வேகத்தில் என் கூச்சம் தவிர்த்து அவளிடம் சென்று, 'நீதான் நான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்!' என்றேன். சின்ன ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தவள் சிரித்துக் கொண்டே என்னுடன் அப்போது டான்ஸ் ஆடினாள். அதன் பிறகு அடிக்கடி அவளைச் சந்தித்தேன். எனது விருப்பத்துக்குச் சம்மதிக்கவைத்தேன். 56 வருட ஹனிமூன்!

ஒருவேளை அந்த ஆரம்பத் தயக்கம் என்னைத் தடுத்திருந்தால், இன்று மரணப் படுக்கையில் 'அன்று அவளிடம் எனது ஆசையை வெளிப்படுத்தியிருக்க வேண்டுமோ' என்ற ஏக்கம் மிச்சம் இருந்திருக்கும். இப்போது நான் மிகச் சுதந்திரமாக உணர்கிறேன். நான் என் வாழ்க்கையை முழுக்க வாழ்ந்திருக்கிறேன்!' என்றார் அர்த்தம் நிறைந்த சிரிப்புடன்.

3) அன்பின் வடிவமெடுங்கள்!

டேவிட் பகிர்ந்துகொண்ட இந்த அனுபவம் விசேஷமானது. 'எனது தந்தை தனியரு ஆளாக உழைத்து முன்னேறி கோடீஸ்வரனாகி எங்கள் குடும்பத்தையே உச்ச நிலைக்குக் கொண்டுசென்றவர். அவர் தனது மரணப் படுக்கையில் இருந்த கடைசி சில நாட்களில் அத்தனை வருடங்களில் தான் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தனது குழந்தைப் பருவம் முதல் இப்போது வரையிலான புகைப்படங்களைத் தன்னைச் சுற்றிப் பரப்பிவைத்துக் கொண்டார். அந்தப் படங்களில் இடம்பெற்றிருந்த மனிதர்களுடனான தனது பாசப் பிணைப்பு குறித்து மட்டுமே பேசி நெகிழ்ந்துகொண்டு இருந்தார். அத்தனை பேரின் அன்பைச் சம்பாதித்ததைத்தான் தனது மிகப் பெரிய சாதனையாக நினைத்து, நிறைவான நிறைவை எட்டினார்!' அந்த நிறைவை எட்டுவதற்கு முதலில் நீங்கள் காதலிக்க வேண்டிய நபர் நீங்கள் தான்!

4) இந்த நொடி, இந்த நிமிடம் வாழுங்கள்!

ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வாழ்க்கை யாகத்தான் கணக்கில்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு இலக்கை அடையும் பயணத்தின் வழித் தங்கல் அல்ல ஒவ்வொரு நாளும்; அந்த நாளே ஓர் இலக்குதான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... குறிப்பிட்ட ஆனால், தீர்மானிக்கப்படாத வருடங்கள்தான் உங்கள் ஆயுட்காலம். அது 40 வருடமோ அல்லது 70 வருடமோ! அந்த வருடங்களின் எந்த ஒரு நொடி கடந்தாலும் அதை மீண்டும் நாம் திரும்பப் பெற முடியாது. உலகின் மிக உன்னத பொக்கிஷம் உங்கள் ஆயுளின் ஒரு நொடிதான். அப்படியிருக்க, அந்த தங்கத் தருணங்களை வெறுப்பு, கோபம், துவேஷம் என்று செலவழிப்பானேன். கொண்டாடுங்கள். உங்கள் சூழல் என்னாவாக இருந்தாலும் அதைக் கொண்டாட உங்கள் மனதைப் பழக்குங்கள்.

93 வயது ஜான் ஒவ்வொரு சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் கண்டு களிக்கிறார். அந்தக் குதூகலத்தை 93 வயதில்தான் நாம் அனுபவிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே, அத்தனை வயது வரை நாம் மிஞ்சி இருப்போமா மாட்டோமா என்ற உத்தரவாதம் இல்லாத போது!

5) பெறுவதைக் காட்டிலும் அதிகமாகக் கொடுங்கள்!

அந்தச் சிறிய கிராமத்துக்கு கென் ஒருவர்தான் பார்பர். ஊரில் எந்த நல்லது கெட்டதுக்கும் கென்தான் கத்தியைத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும். அவரி டம் பேசிக்கொண்டு இருந்தபோது சிம்பிளாக ஒரே வரியில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் சொன்னார், 'இந்த ஊரில் யார் இறந்தாலும் நான் சென்று என் வேலையை முடித்த பிறகு தான் இறுதிச் சடங்குகள் துவங்கும். பல சமயங்களில் நான் எனது கத்தியைக் கழுவிப் பெட்டியில் வைப்பதற்குள் பத்து நிமிடங்களில் சடங்குளை முடித்து, கிட்டத்தட்ட இறந்தவரைத் துரத்தியடிப்பார்கள். ஆனால், சில சமயங் களில் 10 மணி நேரத்துக்கும் மேலாக சடங்கு களை நீட்டித்து இறந்தவரைப் பிரிய மனம் இல்லாமல் கண்களில் நீருடன் வழியனுப்பி வைப்பார்கள். காரணம், அவர் தன் வாழ்க்கை முழுக்கப் பிறருக்காக வாழ்ந்து இருப்பார். என் இறுதிச் சடங்கும் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது பேராசையாகக்கூட இருக்கலாம். ஆனால், அதற்காகவே இந்த உலகத்தின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறேன்!' என்றார்.

இந்த உலகத்தின் மீது ஆசைவையுங்கள்... சொல்லப்போனால் அத்தனை ரகசியங்களிலும் இது மிகவும் சுலபமானது!

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

1. பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பயன்படுத்தத் தேவையில்லை. பயத்த மாவு அல்லது வேறு எதுவும் பூச வேண்டாம். சருமத்தில் இருக்கும் துவாரங்கள் அடைத்துக் கொண்டால் பிரச்னை ஏற்படும். இயற்கையாக விட்டுவிடுதலே நலம்.

2. ஆயில் மசாஜ் செய்யலாம். வேப்பண்ணெய் தவிர்த்து வேறு எந்த எண்ணெயும் பயன்படுத்தலாம்.

3. சீப்பு பயன்படுத்தி தலை வாறுவதில் தவறில்லை. ஆனால் அது தேவையும் இல்லை. கைகளால் கோதிவிடலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மெல்லிய பற்களை உடைய சிறிய சீப்புகளை பயன்படுத்தலாம்.

4. குழந்தைகளுக்கு வாசனை திரவியங்கள் அவசியமே இல்லை. தவிர்ப்பது நல்லது.

5. நம்முடைய ஊரின் தட்பவெப்பத்துக்கு ஏற்றது பருத்தி ஆடைகள் மட்டுமே. சின்தடிக் பயன்படுத்துவது குழந்தைக்கு சவுகர்யமாக இருக்காது.

6. நாப்கின் அணிவிப்பத்தை கூடுமானவரையில் தவிர்ப்பதே நல்லது. வெளியில் தூக்கிச் செல்லும் போது மட்டும் பயன்படுத்துதல் நல்லது. டயாபரில் குழந்தை சிறுநீர் அல்லது மலம் கழித்துவிட்டு வெகு நேரம் அது சருமத்தில் படும் போது கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்படலாம். அது ஒவ்வாமை ராஷஸ் போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.

7. பச்சிளம் குழந்தைகளை அழகுபடுத்த பொட்டு வைப்பார்கள். கெமிக்கல் கலந்த மை அல்லது சாந்து பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படலாம். டெர்மடைடஸ் வரலாம். தவிர்ப்பது நலம். வளையல், கொலுசு போன்ற நகைகள் குழந்தைக்கு உறுத்தலாக இருப்பதோடு தங்க நகைகளில் சிறிதளவு கலந்திருக்கும் நிக்கல் எனப்படும் உலோகம் சில குழந்தைகளுக்கு அலர்ஜியாகிவிடும். உங்கள் குழந்தைக்கு அது பிரச்னையில்லாமல் இருந்தால் அணிவிக்கலாம். போட்ட சில மணி நேரத்தில் அரிப்பு அலர்ஜி ஏற்பட்டால் தவிர்ப்பதே நல்லது.

8. இயற்கைக் காற்று தான் குழந்தைகளுக்கு நல்லது. ஹார்ம்லெஸ் கேஸ்களை பயன்படுத்தி இன்றைய நவீன ஏஸிக்கள் தயாரிக்கப்படுவதால், தவிர்க்க முடியாத சமயங்களில் பயன்படுத்துவது பிரச்னை தராது.

9. ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். அதற்கு மேல் வீட்டில் தயார் செய்யப்படும் கஞ்சி கூழ், ஆப்பிள் போன்ற பழங்களை ஆவியில் வைத்து நன்றாக மசித்து தரலாம். நல்ல தரமான சீரியல்கள் கொடுக்கலாம்.

10. குழந்தைகளின் துணிகளைத் துவைக்க அதிகம் கெமிக்கல் இருக்கும் சோப்புகளையோ பவுடர்களையோ பயன்படுத்தக் கூடாது. மைல்ட் சோப்புகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். குழந்தைகளின் துணிகளை துவைத்தபின் நன்றாக வெயில் படுமாறு காய வைத்தாலே போதுமானது. டெட்டால் கூட தேவையில்லை. அடிக்கடி பயன்படுத்தவேண்டாம்.

ஆதர் அடையாள அட்டை(Aadhar Card)

ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி
இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.


மற்றவர்கள் திரும்பி செல்ல வேண்டியது தான். முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு ஆன்லைனில் Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.


Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :
இதற்காக ஒரு http://appointments.uidai.gov.in/ இணையப்பகுதியை உருவாக்கி உள்ளது.

தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு(Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab) மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


உங்களுக்கு இது போன்று விண்டோ வரும் இதில் நீங்கள் எப்பொழுது யாரை பார்க்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இருக்கும். இதை ஒரு Print எடுத்துக்கொண்டு அதனோடு உங்களின் ID Proof மற்றும் Address proof போன்றவைகளை எடுத்து கொண்டு குறிப்பிட்ட அதிகாரியை பார்த்து உங்கள் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம்.

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு எவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் உண்டாகலாம். அவர்கள் கீழே உள்ள பதத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு செல்லலாம்.


ஆன்லைனில் Enrolment Form டவுன்லோட் செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும் என்பர் எண்ணினால் இந்த லிங்கில் சென்று Enrolment Form டவுன்லோட் செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும்.

வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு இந்த லிங்கில் http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx கிளிக் செய்து செல்லுங்கள்.

இதில் உங்களின் மொபைல் எண்ணையும், Token ID கொடுத்து தேவையான பட்டனை அழுத்தி பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் சந்தேகங்களுக்கு:
உங்களுக்கு இந்த Aadhar அடையாள அட்டையை பற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் Toll free: 1800-180-1947 மற்றும் Email: appointments@uidai.gov.in இவைகளை தொடர்பு கொண்டு கேட்கலாம்.

முடிந்தவரை அனைத்து தகவல்களும் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் வேண்டுமென்றால் கருத்துரையில் கேட்கவும்.

இந்த செய்தி அனைவருக்கும் சென்றடைய கீழே ஓட்டு பட்டைகளில் ஓட்டு போட்டும் சமூக தளங்களில் பகிரவும்.