Monday 16 December 2013

வயிற்றுப்புண்ணை விரட்டும் சீதாப்பழம்!


அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஏனோ இந்தப் பழமொழி, பெரும்பாலும் பழங்களுக்குப் பொருந்தாது போலும். அதனால்தான், பலாப்பழம், சீதாப்பழம் இரண்டையும் சாப்பிடுவதை மக்கள் தவிர்க்கின்றனர். ''அனைவரும் வெறுத்து ஒதுக்கும் சீதாப்பழத்தில், அபார சுவையும் அருமையான சத்தும் இருக்கிறது'' என்கிறார் திண்டுக்கல் சித்த மருத்துவர் ஆர்.எம்.அழகர்சாமி.

'' 'அனோனோ டுமாஸ்ஸா’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக இருப்பதால் சுவையும் இனிப்பாக இருக்கும்.

ரத்த விருத்திக்கும், ரத்தசோகைக்கும் இது நல்லதொரு மருந்தாகும். இதயநோய் வராமல் தடுக்க உதவும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் துணைபுரியும். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கும் முடி வளர்ச்சியைத் தூண்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சளித் தொல்லையைப் போக்கும். சிறுவர்களுக்கு ஏற்படும் பல்வலியைக் குணப்படுத்தும். பற்களை வலுப்படுத்தும். சோர்வுடன் இருக்கும் குழந்தைகளுக்கு, சீதாப்பழத்தை தினமும் கொடுக்கலாம். நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதில் உள்ள தாமிரச் சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டுவர, அமிலத்தன்மையைச் சரிசெய்யும். வயிற்றில் புண்கள் வராமலும் தடுக்கும். மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாதநோய், மூட்டுவலி, கீல்வாதநோய்களைப் போக்கும்.

சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும்.

இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும்.

பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.

சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்துவந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.

பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.

எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது'' என்கிறார்.


சீதாமணப்பாகு செய்வது எப்படி?

வெல்லம் அல்லது கருப்பட்டியைப் பதமாகக் காய்ச்சி, சீதாப்பழத்தின் விதைகளை நீக்கி, சதைப்பகுதியை காய்ச்சிய கருப்பட்டியில் போட்டு, நீர் அளவு வற்றும் வரை மீண்டும் காய்ச்சவேண்டும். பிறகு ஆறவைத்து பாட்டிலில் அடைக்கலாம்.

ஆறு மாதங்கள் வரை இந்த சிரப்பை மிதமான வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், நாள்பட்ட சளி, இருமல் தொடர்பான பிரச்னைகள் தீரும்.
 
thanks:v

No comments:

Post a Comment