Saturday 29 March 2014

மினி ரவை ஊத்தாப்பம்

காலையில் வேலைக்கு செல்வதற்கு நேரமாகிவிட்டால், அப்போது உடனே ஏதாவது சமைத்து சாப்பிட வேண்டுமென்று நினைத்தால், ரவை ஊத்தாப்பம் செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் அந்த அளவில் இதனை விரைவில் செய்யலாம்.
மேலும் பலருக்கு இந்த ரெசிபியானது விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். பேச்சுலர்கள் கூட இதனை விடுமுறை நாட்களில் முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த மினி ரவை ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தயிர் - 1 கப்
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவையை போட்டு 3-4 நிமிடம் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு குளிர வைத்து, ஒரு பௌலில் போட்டு, தயிர், இஞ்சி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு மற்றொரு பௌலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

30 நிமிடம் ஆன பின்னர், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கரண்டி ரவை மாவை ஊற்றி, லேசாக தேய்த்து, பின் அதன் மேல் வெங்காய கலவையை தூவி, எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் கழித்து, கவனமாக திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் மினி ஊத்தாப்பமாக சுட்டு எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment