Friday 25 April 2014


சிலருக்கு திடீரென்று கண்ணின் ஓரம் மின்னலைப் போல் 'பளிச்'சென்று வெளிச்சம் வெட்டி, மின்மினிப் பூச்சிகள் பறப்பதைப் போல் ஒளித் துகள்கள் கண்முன் வட்டமிட்டிருக்க லாம். அப்போது உடல் வியர்க்கக்கூடும், மூக்கில் அடைப்பு ஏற்பட்டு கண்ணில் நீர் கசியக்கூடும்.
இதுபோன்ற அனுபவங்கள் கூடுதலாகவோ, அடிக்கடியோ ஏற்படக்கூடும். உடன், நெற்றிப் பொட்டிலும், கண்ணின் பின்புறமும் லேசான வலி தொடங்கலாம். பின்னர் தலை வலி அதிகமாகி, ஒரு பக்கமாக இடிக்கத் தொடங்கலாம். வெளிச்சம் கண்களைக் கூசச் செய்யும்.
காபியின் மணம்கூட வயிற்றைப் புரட்டும். குமட்டலுடன், சாப்பாட்டைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். மருந்து, மாத்திரைகள் மூலம் தற்காலிக நிவாரணம் தேடினாலும், தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். சரியாகச் சாப்பிட முடியாது, உறங்கி ஓய்வெடுக்கக் கூட முடியாது.

நம்மில் பலருக்கு இது போன்ற அல்லது சிறிது வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். இது ஒற்றைத் தலைவலி அல்லது மைக்ரேன் எனப்படும் பிரச்சினை. 

மூளையின் நரம்பு செல்கள் அல்லது ரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களால் வருவது. இதுகுறித்த விவரங்கள் இதுவரை முழுமையாக அறியப்படவில்லை.

பொதுவாக உலகில் எல்லோருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் தலைவலி வந்து போகிறது. மக்கள் ஆலோசனைக்காக மருத்துவரை அணுகும் முதல் மூன்று காரணங்களில் தலைவலியும் ஒன்று என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். ஆக, தலைவலி என்பது உலகளாவிய பிரச்சினை. 18 வயது முதல் 65 வயது வரை 50 முதல் 75 சதவீதம் பேர் தலைவலியால் அவதிப்படுகிறார்கள்.

ஒற்றைத் தலைவலி அல்லது மைக்ரேன், இறுக்கம் சார்ந்த தலைவலி அல்லது 'டென்ஷன்' தலைவலி இவை இரண்டும் பரவலாகக் காணப்படும் தலைவலி வகைகள். இவை சுமார் 40 சத வீதம் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக, 50 சதவிகிதத்துக்கும் அதிகமான தலைவலிகள், மருத்துவ ஆலோசனை இன்றி கைவைத்தியமாக, சுயசிகிச்சை முறையிலேயே மக்களால் அணுகப்படுகின்றன. இது தவறானது மட்டுமல்ல, ஆபத்தான தும்கூட என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சிறப்பு மருத்துவர்களைத் தேடி வருபவர்களிலும் சுமார் 10 சதவீதம் பேர், அதிக அளவில் தாங்களாகவே வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும், நீண்ட நாட்களாய், தினமும் வருகின்ற தலைவலி நோயால் பீடிக்கப்படுகின்றனர்.

வலி நீக்க அவர்களாக உட்கொள்ளும் மருந்துகளே, நாளடைவில் அவர்களுக்குத் தலைவலியை உண்டாக்குகின்றன என்பது வேதனையான உண்மை. இன்றைய நெருக்கடியான வாழ்க்கையின் பிரச் சினைகள், மன ஏற்ற இறக்கங்கள், பொதுவாழ்வின் சிக்கல்கள், மனிதநேயமற்ற
உறவுகள், சக மனிதர்கள், உரிமை பாதிப்புகள் போன்றவை ஏற்படுத்தும் மனஇறுக்கமும், எப்போதும் அலைபாய்கின்ற மனதின் படபடப்பு நிலையும் டென்ஷன் தலைவலிக்குக் காரணங்களாகின்றன. 

இது டிஜிட்டல் உலகம். கணினி வேலை, கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சியின் தாக்கம், செல்போன் போன்றவையும் டென்ஷன் தலைவலிகளை அதிகப்படுத்துகின்றன.
தலைவலிகளால் இழக்கப்படுகின்ற மனிதத் திறமைகளும், கால விரயமும் மனித மேம்பாட்டுக்கு மிகப் பெரிய தடைக்கற்களாய் உள்ளன. 

சரியான நேரத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையும், உரிய சிகிச்சையும் தலைவலியிலிருந்தும், அதனால் ஏற்படுகின்ற பல இழப்புகளிலிருந்தும் நம்மைக் காக்கும். தலைவலிதானே என்று சாதாரணமாய் எடுத்துக் கொண்டால், அதன்பின் விளைவுகளுக்கு நாமே பொறுப்பாக வேண்டும்!

No comments:

Post a Comment